தோனி ஓய்வு பெற்ற பிறகு, எனது செயல்பாடு சிறப்பாக இல்லை - குல்தீப் யாதவ்


தோனி ஓய்வு பெற்ற பிறகு, எனது செயல்பாடு சிறப்பாக இல்லை - குல்தீப் யாதவ்
x

கோப்புப்படம்

இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

மும்பை,

இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அஸ்வினுக்கு நிகராக குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். கடந்த 2016-ல் அறிமுகமான அவர் அதே காலகட்டத்தில் யுஸ்வேந்திர சஹாலுடன் சேர்ந்து குறுகிய காலத்திலேயே முதன்மை ஸ்பின்னராகவும் உருவெடுத்தார்.

குல்தீப்-சஹால் இணை அஸ்வின் - ஜடேஜா இணையை பின்னுக்கு தள்ளி முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களா உருவெடுத்தனர். 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய இந்த இணை அதன் பின்னர் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர்.

குறிப்பாக குல்தீப் யாதவ் ஐ.பி.எல் தொடரில் சரமாரியாக அடி வாங்கியதால் கொல்கத்தா அணியில் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் மீண்டும் தற்போது சிறப்பாக விளையாடி இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ளார்.

2019 உலகக் கோப்பைக்கு பின் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் இந்திய அணியில் இடத்தை இழந்ததற்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் ஓய்வும் முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் பேட்ஸ்மேன்களிடம் அடி வாங்கிய போதெல்லாம் தோனி அவர்களுக்கு அருகே சென்று எப்படி பந்து வீச வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தார்.

இந்நிலையில் தோனி இல்லாததால் தம்முடைய செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டது என்பது உண்மை தான் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது,

நான் தோனி இன்னும் விளையாட வேண்டும் என்று விரும்பினேன். ஏனெனில் அவர் இருந்தால் எங்களுக்கு பந்து வீசுவது எளிதாக இருக்கும். தோனி ஓய்வுக்குப் பின் பந்து வீச்சில் என்னுடைய செயல்பாடுகள் சிறப்பாக இல்லை.

உங்களை வழி நடத்தும் ஒருவர் அங்கே இல்லாமல் போனால் திடீரென அனைத்தும் உங்களுடைய தோள்கள் பாரமாகி விடும் என்பதால் அப்படி நடக்கும். எனவே எனக்கு என்ன நடந்தது என்பதை புரிந்துக்கொள்ள நேரம் தேவைப்பட்டது.

ஆனால் தோனி பாய் கீப்பிங் செய்த போது நானும் சஹாலும் மகிழ்ச்சியுடன் பந்து வீசினோம். அவர் எங்களுக்கு நிறைய ஐடியா கொடுப்பார் என்பதால் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. அவர் பீல்டிங்கை மாற்றிக் கொடுப்பார் என்பதால் பந்து வீசுவது மட்டுமே எங்களுடைய வேலை. எனவே களத்திலும் களத்திற்கு வெளியேயும் தோனி பாயுடன் நான் இருந்த நேரங்கள் மகத்தானது என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story