ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்


ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்
x

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வெற்றியை தொடரும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று வங்காளதேசத்துடன் மோதுகிறது.

கொழும்பு,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன. தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.

அதே சமயம் பாகிஸ்தான், இலங்கையிடம் உதை வாங்கிய வங்காளதேசம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும்.

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி, ஸ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்படலாம். முதுகுவலியால் அவதிப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். எனவே அவர் களம் திரும்ப வாய்ப்புள்ளது.

இலங்கைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், ரவீந்திர ஜடேஜாவும் மிரட்டினர். ஆனால் இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் 5 ஓவர்களில் 29 ரன் விட்டுக்கொடுத்தாரே தவிர விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இடக்கை சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் சிறப்பாக பந்து வீசும் நிலையில், மற்றொரு இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் தேவையில்லை. அவருக்கு பதிலாக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவரை உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று கும்பிளே உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இதனால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் அக்ஷர் பட்டேல் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

மற்றபடி பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா என்று இந்தியா வலுவாக திகழ்கிறது. சாதனையின் விளிம்பில் உள்ள ஜடேஜா இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் ஒரு நாள் போட்டியில் 200 விக்கெட் மைல்கல்லை எட்டிய 7-வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார். மொத்தத்தில் இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா அந்த வீறுநடையை தொடரும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

வங்காளதேச அணியை பொறுத்தவரை அந்த அணியில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் தாயகம் திரும்பி விட்டார். தொடக்க ஆட்டக்காரர் முகமது நைம் லீக் மற்றும் சூப்பர்4 சுற்றை சேர்த்து 4 ஆட்டங்களில் வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் தொடர்ந்து தடுமாறுவதால் இந்த ஆட்டத்தில் அவரை கழற்றி விட்டு தன்சித் ஹசனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

இவ்விரு அணிகள் இதுவரை 39 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31-ல் இந்தியாவும் 7-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.


Next Story