தமிழக வீரர்கள் மீது பாரபட்சம் காட்டும் பிசிசிஐ?: இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் ஆதங்கம்


தமிழக வீரர்கள் மீது பாரபட்சம் காட்டும் பிசிசிஐ?: இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் ஆதங்கம்
x

இந்திய அணியில் நடராஜன் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

சென்னை,

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன. அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இந்த பிரிவில் அங்கம் வகிக்கின்றன.

இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், சிவம் துபே, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், பும்ரா போன்ற முன்னணி வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதோடு சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஒரு தமிழக வீரருக்கு கூட வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் தமிழக வீரரான நடராஜன், தினேஷ் கார்த்திக், சாய் சுதர்சன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியதாவது:-

தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இருமடங்கு சிறப்பாக விளையாடி தங்களை நிரூபித்தால் மட்டுமே அணியில் இடம் கொடுப்போம் என்ற பாரபட்சம் ஏன்?. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இடம்பெற்றிருக்க வேண்டும். பிற மாநில வீரர்களைப் போல தமிழ்நாட்டு வீரர்களுக்கு ஏன் கூடுதல் ஆதரவு கிடைப்பதில்லை?. இந்த சூழலை பலமுறை நான் எதிர்கொண்டுள்ளேன். இதனை யாரும் வெளிப்படுத்துவதில்லை என்பதால் நான் பேசுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story