அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை - ராஜஸ்தான் வீரரின் பார்ம் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து


அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை - ராஜஸ்தான் வீரரின் பார்ம் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து
x

Image Courtesy: AFP 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி கண்டு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்பில் உள்ளது.

அதேவேளையில் 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி மட்டும் கண்டுள்ள பஞ்சாப் அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலையில் களம் இறங்குகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் இதுவரை 5 போட்டிகளில் ஆடி வெறும் 63 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

இருப்பினும் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்வது வருவதால், ராஜஸ்தான் அணி வெற்றிகளை பெற்று வருகிறது. குறிப்பாக சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் தலா 3 அரைசதங்களை விளாசி அசத்தியுள்ளனர். அதேபோல் பட்லர் தன் பங்கிற்கு ஒரு சதம் விளாசி பார்முக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஜெய்ஸ்வால் கொஞ்சம் கூட ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். பட்லர், சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. இருப்பினும் ஜெய்ஸ்வால் மீது எந்த விமர்சனமும் கிடையாது. அவர் மீது கவனம் செலுத்த தேவையில்லை. ஆனாலும் அவர் ரன்கள் சேர்க்காமல் இருக்கும் போட்டிகளை நிச்சயம் குறித்து வைத்து கொள்கிறேன்.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பட்லர் பேட்டிங்கை பார்க்க ஆவலாக உள்ளேன். ஏனென்றால் ரபாடா மற்றும் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக எப்படி செயல்பட உள்ளார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன். அவர்களை சமாளித்தால், பட்லர் தான் இன்று கேம் சேஞ்சர். பட்லருக்கு பின் ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் மீது கவனம் உள்ளது.

ஏனென்றால் மிகச்சிறந்த பார்மில் இருக்கிறார். அவருக்கு இந்த சீசனில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருப்பதாக நினைக்கிறேன். கடந்த போட்டியில் ரஷீத் கான் பவுலிங்கில் ஆட்டமிழந்திருந்தாலும், இந்த போட்டியில் கம்பேக் கொடுப்பார் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story