முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்


முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
x

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.

ராஞ்சி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

20 ஓவர் தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களம் இறங்குகிறது. துணைகேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். 20 ஓவர் போட்டி அணியின் வருங்கால கேப்டனான உருவெடுக்க வசதியாக ஹர்திக் பாண்ட்யாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையில் சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது நினைவுகூரத்தக்கது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் ஆடிய கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு பணிச்சுமை காரணமாக இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. ரஞ்சி போட்டியில் அசாமுக்கு எதிரான ஆட்டத்தில் 379 ரன்கள் குவித்து சாதனை படைத்ததன் மூலம் பிரித்வி ஷா அணிக்கு திரும்பி இருக்கிறார். பந்து வீச்சில் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மிரட்டல் அளிக்கக்கூடியவர்கள்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் (31, 14 ரன்கள்) எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாத அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் 20 ஓவர் போட்டியில் எப்போதும் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடியவர். அவரது அதிரடி ஜாலம் இந்த தொடரிலும் தொடரும் என்று நம்பலாம். இதேபோல் கடந்த ஒருநாள் தொடரில் மிடில் ஆர்டரில் களம் இறங்கி சொதப்பிய இஷான் கிஷன் தனது அதிரடி திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் சுப்மன் கில்லுடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறங்குகிறார். ஒருநாள் தொடரில் 360 ரன்கள் குவித்த சுப்மன் கில் குறித்தும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. மணிக்கட்டு காயத்தால் அவதிப்படும் ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் இருந்து விலகினார்.

கடைசியாக ஆடிய 11 இருபது ஓவர் போட்டி தொடர்களில் தொடரை இழக்காமல் வீறுநடை போடும் இந்திய அணி, ஒருநாள் போட்டி தொடரை போல் இந்த தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணி ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெர் தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. அந்த அணியின் பேட்டிங்கில் கடைசி ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய டிவான் கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், பின் ஆலென், ஆல்-ரவுண்டர்கள் மிட்செல் சான்ட்னெர், டேரில் மிட்செல் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். பந்து வீச்சில் லோக்கி பெர்குசன், பிளேர் டிக்னெர், ஜேக்கப் டப்பி, சோதி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி அதற்கு பதிலடி கொடுக்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். 20 ஓவர் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி இந்த தொடரில் குறைந்தபட்சம் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் தான் தனது நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். எனவே இந்திய அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த தீவிரம் காட்டும். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்விரு அணிகள் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 22 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இந்திய அணி 12 ஆட்டங்களிலும், நியூசிலாந்து அணி 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. ராஞ்சி சர்வதேச ஸ்டேடியத்தில் இந்திய அணி இதுவரை மூன்று 20 ஓவர் போட்டியில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் 2021-ம் ஆண்டு நவம்பரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் அடங்கும். மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆட்டத்தில் டாசும் முக்கிய பங்கு வகிக்கும். இரவில் பனி தாக்கம் காரணமாக 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு அனுகூலம் கிடைக்கும்.

ராஞ்சியில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்களை முன்னாள் கேப்டன் டோனி நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் சும்பன் கில் இந்த தொடரில் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று தெரிவித்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பிரித்வி ஷா வாய்ப்புக்காக காத்து இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 'முக்கியமான இரண்டு பவுலர்களுக்கு ஓய்வு கொடுத்து இருப்பதால் எங்களுக்கு நெருக்கடி எதுவுமில்லை. புதிய பந்தில் பந்து வீச நான் எப்பொழுதும் விரும்புவேன்' என்று கூறினார்.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: சுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங். குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல்,

நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), பிளேர் டிக்னெர், சோதி, பென் லிஸ்டெர், லோக்கி பெர்குசன்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story