'இந்தியா - பாக். ஆட்டம் ஐசிசி நடத்தும் நிகழ்வுபோல் இல்லை, பிசிசிஐ நடத்தும் நிகழ்வு போன்றிருந்தது'-பாக். அணியின் இயக்குனர்


இந்தியா - பாக். ஆட்டம் ஐசிசி நடத்தும் நிகழ்வுபோல் இல்லை, பிசிசிஐ நடத்தும் நிகழ்வு போன்றிருந்தது-பாக். அணியின் இயக்குனர்
x

image courtesy; ICC via ANI

தினத்தந்தி 15 Oct 2023 6:52 AM GMT (Updated: 15 Oct 2023 6:58 AM GMT)

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் ஐசிசி நிகழ்வுபோல் இல்லாமல் பிசிசிஐ நிகழ்வு போன்றிருந்தது என பாகிஸ்தான் அணியின் இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்தியா அசத்திய தருணங்களில் "சக்தே இந்தியா" பாடல் ஒலிபரப்பப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அசத்திய தருணங்களில் "தில்தில் பாகிஸ்தான்" உத்வேக பாடல் ஒளிபரப்பப்படவில்லை என்று பாகிஸ்தான் இயக்குனர் மிக்கி ஆர்த்தர் விமர்சித்துள்ளார். அந்த வகையில் தங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு மற்றும் உத்வேகம் கிடைக்கவிடாமல் பிசிசிஐ தடுத்து விட்டதாக விமர்சிக்கும் அவர் இன்னும் பாகிஸ்தான் அணி தங்களுடைய உண்மையான பலத்தை காட்டவில்லை என்று கூறியுள்ளார்.

இது பற்றி அவர் நேற்று பேசியது பின்வருமாறு;- "

இன்று இரவு நடைபெற்றது ஐசிசி நடத்திய ஆட்டத்தைபோல் தெரியவில்லை என்பதே உண்மையாகும். மாறாக அது பிசிசிஐ நடத்திய இருதரப்பு தொடரைபோல் இருந்தது. ஏனெனில் 'தில்தில் பாகிஸ்தான்' பாடலை நான் இந்த ஆட்டத்தில் எந்த இடத்திலும் மைதானத்தில் ஒலிபரப்புவதை கேட்கவில்லை. அதுவும் உங்களுடைய வெற்றியில் பங்காற்றக்கூடியதாகும். இருப்பினும் இதை நான் சாக்காக சொல்லவில்லை.

இந்த ஆட்டத்தில் நாங்கள் சுமாராக செயல்பட்டோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தங்களுடைய தரத்திற்கு விளையாடவில்லை. இந்திய அணி சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக ரோகித் வழிநடத்தும் இந்திய அணி அனைத்திலும் பூர்த்தி அடைந்துள்ளது. அவர்களை தொடரின் இறுதியில் மீண்டும் சந்திக்க காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Next Story