ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணியை வீழ்த்திய பஞ்சாப்


ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணியை வீழ்த்திய பஞ்சாப்
x

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கர்ரண் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் இணைந்து சென்னை அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ரகானே 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே இந்த ஆட்டத்தில் ஏமாற்றினார். சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

மிடில் ஓவர்களில் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சென்னையை வெகுவாக கட்டுப்படுத்தினர். பின்னர் களமிறங்கிய ஜடேஜாவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கெய்க்வாட் நிலைத்து விளையாடினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்து கெய்க்வாட் - சமீர் ரிஸ்வி சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் சமீர் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் அரைசதம் அடித்து அசத்தினார். அரைசதம் அடித்த பிறகும் தொடர்ந்து பேட்டிங் செய்த அவர் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் களமிறங்கிய எம்.எஸ்.தோனி 11 பந்துகளில் 14 ரன்கள் அடித்த நிலையில் ரன் அவுட் ஆனார். நடப்பு சீசனில் தோனி ஆட்டமிழப்பது இதுவே முதல் முறையாகும்.

பின்னர் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக கெய்க்வாட் 62 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக பிரார் மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் சார்பில் பரப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பரப்சிம்ரன் சிங் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக பேர்ஸ்டோவுடன் ரிலி ரூசோ ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். பின்னர் இந்த ஜோடியில் ஜானி பேர்ஸ்டோ 46 (30) ரன்களில் ஷிவம் துபே பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரூசோவும் 43 (23) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.

அடுத்ததாக ஷஷாங் சிங் மற்றும் கேப்டன் சாம் கரன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியினர் நிதானமாக ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

முடிவில் ஷஷாங் சிங் 25 (26) ரன்களும், சாம் கரன் 26 (20) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் ஷர்துல் தாக்கூர், கிலிசன் மற்றும் சிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.


Next Story