ஐ.பி.எல்; டு பிளெஸ்சிஸ், சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்த பி.சி.சி.ஐ...காரணம் என்ன..?


ஐ.பி.எல்; டு பிளெஸ்சிஸ், சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்த பி.சி.சி.ஐ...காரணம் என்ன..?
x

Image Courtesy:@RCBTweets / AFP 

தினத்தந்தி 22 April 2024 5:41 AM GMT (Updated: 22 April 2024 10:04 AM GMT)

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை.

மும்பை,

ஐ.பி.எல் தொடரில் நேற்று மாலை கொல்கத்தாவில் நடைபெற்ற 36வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்ததன் மூலம் பெங்களூரு அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இதையடுத்து இரவு முல்லன்பூரில் நடைபெற்ற 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கேள்விகுறியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த இரு ஆட்டங்களில் ஆடிய பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் மற்றும் பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரனுக்கு பி.சி.சி.ஐ அபராதம் விதித்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை.

இதன் காரணமாக பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, மறுபுறம் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரனுக்கு ஐ.பி.எல் நடத்தை விதிகளின் பிரிவு 2.8 இன் கீழ் லெவல் 1 குற்றத்திற்காக போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு காட்டியதை அடுத்து அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்தை சாம் கர்ரன் ஒப்புக்கொண்டதாகவும், அபராதம் விதித்ததை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story