ஐ.பி.எல். தொடரை பயன்படுத்தி கொள்ளுங்கள் - கோலிக்கு ஸ்டெயின் எச்சரிக்கை


ஐ.பி.எல். தொடரை பயன்படுத்தி கொள்ளுங்கள் - கோலிக்கு ஸ்டெயின் எச்சரிக்கை
x

image courtesy: AFP

தினத்தந்தி 16 March 2024 1:23 PM GMT (Updated: 16 March 2024 1:26 PM GMT)

ஐ.பி.எல். தொடரை விராட் கோலி சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று ஸ்டெயின் கூறியுள்ளார்.

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடைசியாக டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் விளையாடினார். அதன் பிறகு தனிப்பட்ட காரணங்களால் ஓய்வில் இருந்த விராட் கோலி,தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதற்காக ஆயத்தமாகி வருகிறார்.

இதற்கிடையே வரும் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறுவது சந்தேகத்தில் இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு காரணம் மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஆடுகளம் விராட் கோலியின் ஆட்டத்திற்கு ஏற்ற வகையில் இருக்காது என்பதால் இந்த முடிவு பரிசீலனை செய்யப்படுவதாக கூறப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயின் கூறுகையில்,

'விராட் கோலிக்கு வரும் ஐ.பி.எல். தொடர் மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் இந்த தொடரில் அவர் ரன்கள் குவித்தால் உலகக்கோப்பைக்கு முன்பு மனதளவில் அவர் நல்ல நிலையில் இருப்பார். விராட் கோலி கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டதால், அவரை சில வீரர்கள் முந்தி சென்று விட்டார்கள் என்று தோன்றுகிறது. இதன் காரணமாக வரும் டி20 உலகக்கோப்பையில் நிறைய வீரர்கள் தங்களுடைய வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் விராட் கோலி இடத்திற்கு கொஞ்சம் ஆபத்து ஏற்படலாம். விராட் கோலி எவ்வளவு ரன்கள் அடித்திருக்கிறார்கள் என்று நான் சொல்லி தெரிய தேவையில்லை. அவர் பல ஆண்டுகளாக பல ரன்களை சேர்த்து இருக்கிறார். கடந்த கால ரெக்கார்ட்டை வைத்து அணியை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அதில் விராட் கோலி நிச்சயம் இருப்பார். எனினும் கடந்த சில போட்டிகளாக நிறைய வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து இருப்பது கொஞ்சம் கவனிக்க வேண்டும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story