இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் அயர்லாந்து 492 ரன்கள் குவித்து சாதனை.!


இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் அயர்லாந்து 492 ரன்கள் குவித்து சாதனை.!
x

டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 400 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும்.

காலே,

இலங்கை-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி தொடக்க நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 319 ரன்கள் எடுத்து இருந்தது. லார்கன் டக்கெர் 78 ரன்னுடனும், கர்டிஸ் கேம்பெர் 27 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய டக்கெர் 80 ரன்னில் போல்டு ஆனார். காயம் காரணமாக முந்தைய நாளில் பாதியில் வெளியேறிய பால் ஸ்டிர்லிங் மீண்டும் களம் இறங்கினார். முதலாவது சதம் அடித்த பார் ஸ்டிர்லிங் 103 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவருடன் இணைந்த கர்டிஸ் கேம்பெர் முதல் சதம் அடித்த நிலையில் 111 ரன்னில் வெளியேறினார்.

தேனீர் இடைவேளையின் போது அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 145.3 ஓவர்களில் 492 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 400 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும். அத்துடன் இன்னிங்சில் இரு அயர்லாந்து வீரர்கள் சதம் காண்பதும் இதுவே முதல் நிகழ்வாகும். இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 18.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் இருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் 2-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. நிஷன் மதுஷ்கா 41 ரன்களுடனும், கேப்டன் கருணாரத்னே 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story