ஜெய்ஸ்வால், ஷிவம் துபே அதிரடி .... ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா..!


ஜெய்ஸ்வால், ஷிவம் துபே அதிரடி .... ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா..!
x
தினத்தந்தி 14 Jan 2024 4:40 PM GMT (Updated: 14 Jan 2024 4:42 PM GMT)

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது..

இந்தூர்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் அடித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குல்பாடின் நைப் அதிரடியாக விளையாடி 57 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். விராட் கோலி 16 பந்துகளை சந்தித்து 29 ரன்கள் அடித்த நிலையில் நவீன் உல் ஹக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கை கோர்த்த ஷிவம் துபே - ஜெய்ஸ்வால் ஜோடி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தது. இதனால் இந்தியா எந்தவித சிக்கலுமின்றி வெற்றிப்பாதையில் பயணித்தது. இலக்கை நெருங்கிய தருவாயில் ஜெய்ஸ்வால் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து 2-வது அரைசத்தை பதிவு செய்த ஷிவம் துபே கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தார். வெறும் 15.4 ஓவர்களிலேயே இந்திய அணி இலக்கை கடந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது..


Next Story