ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி


ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி
x

image courtesy: AsianCricketCouncil twitter

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

துபாய்,

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆதர்ஷ் சிங் (62 ரன்), உதய் சாஹரன் (60 ரன்), சச்சின் தாஸ் (58 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது ஜீஷான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் சமைல் ஹூசைன் 8 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடி இந்திய பவுலர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஷசாயிப் கான் 63 ரன்கள் திரட்டினார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் 47 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அசன் அவைஸ் 105 ரன்களுடனும் (130 பந்து, 10 பவுண்டரி), சாத் பெய்க் 68 ரன்களுடனும் (51 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்ற பாகிஸ்தான் அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

2-வது லீக்கில் ஆடிய இந்திய அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். இந்தியா தனது கடைசி லீக்கில் நேபாளத்தை நாளை சந்திக்கிறது. அரைஇறுதிக்கு தகுதி பெற இந்த ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.


Next Story