தோனி - ஸ்டீபன் பிளெமிங்கிடமிருந்து நானும் - மெக்கல்லமும் சில விஷயங்களை கற்றுள்ளோம்- ஸ்டோக்ஸ்


தோனி - ஸ்டீபன் பிளெமிங்கிடமிருந்து நானும் - மெக்கல்லமும் சில விஷயங்களை கற்றுள்ளோம்- ஸ்டோக்ஸ்
x

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் விளையாடி உள்ளனர்.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2-ம் தேதி) நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் எம்.எஸ்.தோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோர் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து சிறந்த அணியை உருவாக்குவதற்கான முடிவை வேகமாக எடுக்கும் கலையை தாமும் பிரெண்டன் மெக்கல்லமும் கற்றுக்கொண்டதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை. ஆனால் அந்த நம்ப முடியாத சிறந்த அணியில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். புனே அணிக்காக விளையாடியபோது நான் தோனி மற்றும் பிளெமிங் ஆகியோருடன் இருந்துள்ளேன். அவர்கள் இருவரும் எப்படி ஒருவரையொருவர் பூர்த்தி செய்வார்கள் என்பது நாம் பார்க்க வேண்டிய ஒன்று என நினைக்கிறேன்.

அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சிறந்த புரிதலை கொண்டிருப்பதாக நினைக்கிறேன். எம்.எஸ். தோனி மற்றும் பிளெமிங் ஆகியோர் அணித்தேர்வு சம்பந்தமாக அல்லது எந்த முடிவாக இருந்தாலும் அதை வேகமாக எடுப்பார்கள். அது எப்போதும் அணிக்கு நன்மையை ஏற்படுத்துவதாக இருக்கும். அதைத்தான் நானும் மெக்கல்லமும் எப்போதும் கடைபிடிக்கிறோம்" என்று கூறினார்.

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story