இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்; பர்கானா அபார சதம்...வங்கதேசம் 225 ரன்கள் சேர்ப்பு...!


இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்; பர்கானா அபார சதம்...வங்கதேசம் 225 ரன்கள் சேர்ப்பு...!
x

Image Courtesy: Twitter 

வங்கதேச அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் பர்கானா சதம் (105) அடித்து அசத்தினார்.

டாக்கா,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 1-1 என ஒருநாள் தொடர் சமனில் உள்ளது.

இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷமிமா சுல்தானா, பர்கானா ஆகியோர் களம் இறங்கினர்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர். இதில் சுல்தானா 52 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய நிகர் சுல்தானா 24 ரன், ரிது மோனி 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய பர்கானா சதம் அடித்து அசத்தினார். இறுதியில் வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் பர்கானா 105 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவதோடு தொடரையும் கைப்பற்றலாம் என்ற நிலையில் இந்திய பெண்கள் அணி ஆட உள்ளது.


Next Story