இந்திய அணியில் ரஜத் படிதாரா அல்லது சர்பராஸ் கானா? - ஹர்பஜன் சிங் தேர்வு செய்த வீரர்


இந்திய அணியில் ரஜத் படிதாரா அல்லது சர்பராஸ் கானா? - ஹர்பஜன் சிங் தேர்வு செய்த வீரர்
x

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரஜத் படிதார் அல்லது சர்பராஸ் கான் ஆகிய இருவரில் ஒருவர் இந்திய அணியின் பிளேயிங் 11-ல் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2-ம் தேதி) நடைபெற உள்ளது.

இந்த 2-வது போட்டியில் கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயத்தால் வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முன்பாகவே விராட் கோலியும் முதலிரண்டு போட்டிகளில் சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.

இருப்பினும் இந்த 3 வீரர்கள் இல்லாததால் 2-வது போட்டியில் ரஜத் படிதார் அல்லது சர்பராஸ் கான் ஆகிய இருவரில் ஒருவர் இந்திய அணியின் பிளேயிங் 11-ல் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் பெரிய ரன்கள் குவித்து கடுமையாக போராடி தேர்வாகியுள்ள சர்பராஸ் கான் 2வது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் விராட் கோலி வரும்போது 3-வது போட்டியில் சர்பராஸ் கான் நீக்கப்படுவார் என்று ஹர்பஜன் கூறியுள்ளார். எனவே முதல் போட்டியிலேயே முடிந்தளவுக்கு அபாரமாக செயல்பட்டு சர்பராஸ் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்று ஹர்பஜன் கேட்டுக் கொண்டுள்ளார். ஒருவேளை அதை செய்ய தவறினால் மேற்கொண்டு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"சர்பராஸ் கான் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை அதிகமாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் விராட் கோலி மீண்டும் வரும்போது அவர் அணியிலிருந்து வெளியேற வேண்டும். எனவே இந்த வாய்ப்பை அவரால் வீணடிக்க முடியாது. உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து பெரிய ரன்கள் குவித்து போராடி வந்துள்ள அவர் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்" என்று கூறினார்.


Next Story