ரஞ்சி கிரிக்கெட்: கோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி முன்னிலை


ரஞ்சி கிரிக்கெட்: கோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி முன்னிலை
x

தமிழக அணி முதல் இன்னிங்சில் 273 ரன்கள் அடித்தது.

பனாஜி,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது 5-வது லீக் ஆட்டத்தில் கோவாவுடன் மோதுகிறது.

இதில் 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த கோவா அணி முதல் இன்னிங்சில் 75.5 ஓவர்களில் 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சுயாஷ் பிரபுதேசாய் 104 ரன்களும், கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் 69 ரன்களும் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் அடித்திருந்தது.

இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 273 ரன்கள் அடித்தது. தமிழக அணியில் ஜெகதீசன் 75 ரன்களும், பிரதோஷ் ரஞ்சன் பால் 71 ரன்களும், விஜய் சங்கர் 54 ரன்களும் அடித்து அணி முன்னிலை பெற உதவினர். தமிழக அணி முதல் இன்னிங்சில் 32 ரன்கள் முன்னிலை பெற்றது. கோவா தரப்பில் அதிகபட்சமாக மோஹித் ரெட்கர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய கோவா 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் தற்போது வரை தமிழக அணி 22 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.


Next Story