ரிஷப் பண்ட் இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதில் உறுதியுடன் இருக்கிறார் - ரிக்கி பாண்டிங்


ரிஷப் பண்ட் இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதில் உறுதியுடன் இருக்கிறார் - ரிக்கி பாண்டிங்
x

image courtesy; PTI

தினத்தந்தி 7 Feb 2024 10:13 AM GMT (Updated: 20 Feb 2024 12:31 PM GMT)

ரிஷப் பண்ட் இந்த தொடர் முழுவதும் விளையாட முடியவில்லை என்றாலும், அணிக்காக 10 போட்டிகளில் விளையாடினால் கூட அது போனஸ்தான் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

சிட்னி,

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், அந்த விபத்தில் அடைந்த காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் காரணமாக ஐபிஎல் 2023 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பண்ட் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இதையடுத்து காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியது. அதற்கேற்றவாரே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே ரிஷப் பண்டை தக்கவைப்பதாக அறிவித்தது. இதனால் நிச்சயம் ரிஷப் பண்ட் இந்தாண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் மிகவும் உறுதியுடன் உள்ளதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 'ரிஷப் பண்ட் தற்சமயம் விளையாடுவதில் மிகவும் உறுதியுடன் உள்ளர். அவர் தற்போது எந்த நிலையில் உள்ளார் என்பது தெரியவில்லை. சமூக வலைதளங்களில் வரும் விஷயங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அதில் அவர் நன்றாக இருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் ஐ.பி.எல் தொடரில் எங்களது முதல் போட்டிக்கு இன்னும் ஆறு வாரங்கள் மட்டுமே உள்ளது. அதனால் அவருக்கு அணியின் விக்கெட் கீப்பருக்கான இடம் கிடைக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்து நான் அவரிடம் கேட்டால், ரிஷப் பண்ட் கண்டிப்பாக 'நான் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவது மட்டுமின்றி, என்னால் விக்கெட் கீப்பிங்கும் செய்ய முடியும்' என்று கூறுவார்.

அவர் திறமையான வீரர். அவர்தான் எங்கள் அணியின் கேப்டனும் கூட. கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் நாங்கள் அவரை மிகவும் இழந்தோம். ஏனெனில் கடந்த 12-13 மாதங்கள் அவர் குறித்த விஷயங்களை நாம் அறிவோம். ஏனெனில் அவர் அந்த விபத்தில் உயிர் பிழைத்ததே மிகவும் அதிர்ஷ்டமான ஒன்று. இதனால் அவர் இந்த தொடர் முழுவதும் விளையாட முடியவில்லை என்றாலும், எங்களுக்காக 10 போட்டிகளில் விளையாடினால் கூட அது எங்களுக்கு போனஸ்தான்" என்று கூறியுள்ளார்.


Next Story