ஐ.பி.எல்.: கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ரோகித் அசத்தவில்லை... அதனாலயே கேப்டன்ஷிப்... - உத்தப்பா


ஐ.பி.எல்.: கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ரோகித் அசத்தவில்லை... அதனாலயே கேப்டன்ஷிப்... - உத்தப்பா
x
தினத்தந்தி 21 April 2024 10:21 AM GMT (Updated: 21 April 2024 10:24 AM GMT)

கடந்த சில வருடங்களாக கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ஐ.பி.எல். தொடரில் ரோகித் சர்மா அசத்தவில்லை என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா இந்த சீசனுக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டார்.

ஐ.பி.எல். தொடரில் ஒரு கோப்பையை வெல்வதற்கே தடுமாறிய மும்பை அணி 2013 - 2020 வரையிலான காலகட்டங்களில் ரோகித் சர்மா தலைமையில் 5 கோப்பைகளை வென்றது. அதனால் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்த ரோகித் சர்மா இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை தலைமை தாங்கி வருகிறார்.

அப்படிப்பட்ட அவரை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை அணி நிர்வாகம் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்துள்ளது. இதனால் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் பலர் அதிருப்தி தெரிவித்ததுடன், போட்டியின்போது மைதானத்தில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் கடந்த சில வருடங்களாக கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ரோகித் சர்மா அசத்தவில்லை என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார். அதனாலயே மும்பை நிர்வாகம் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை கழற்றி விட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியால் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட வீரர். 2013-ல் ரோகித் சர்மாவிடம் மும்பை கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்டபோது அது ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து எடுக்கப்பட்டது. இதுவும் அதே போன்ற உரிமையாகும். அந்த காலத்தில் சச்சின், பாண்டிங், ஹர்பஜன் போன்ற சீனியர்கள் ரோகித்துக்கு ஆதரவு கொடுத்தனர்.

இங்கே ரோகித் சர்மா போன்ற பேட்ஸ்மேனின் மகத்துவத்தை பற்றி நான் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் கோடிகளை முதலீடு செய்யும் ஒரு ஐ.பி.எல். அணியின் பார்வையில் பார்க்கும்போது கடந்த 4 வருடங்களாக அவருடைய புள்ளிவிவரங்கள் நன்றாக இல்லை. 2020-ல் அவருடைய தலைமையில் மும்பை வென்றது. ஆனால் அதன் பின் மும்பை வெல்லவில்லை. கடந்த 3 சீசன்களில் ரோகித் சர்மா 300க்கும் குறைவான ரன்களே அடித்துள்ளார்.

எனவே ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அவர் வெற்றிகரமாக செயல்படவில்லை. அதே சமயம் ஐ.பி.எல். தவிர்த்து அவர் மற்ற இடங்களில் ரன்கள் அடித்துள்ளார். அதனாலயே ரோகித்தை தாண்டி அணியை பார்க்க வேண்டும் என்ற இடத்திற்கு மும்பை வந்துள்ளார்கள். இதைப் பற்றி கடந்த வருடமே அவரிடம் மும்பை பேசியிருக்கலாம். எனவே வெற்றிகரமான மும்பை அணி இப்படி ஒரு முடிவை எடுத்ததற்காக நீங்கள் குறை சொல்ல முடியாது" என்று கூறினார்.


Next Story