2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு ரோகித் சர்மாதான் கேப்டனாக இருக்க வேண்டும்- ஜாகீர்கான்


2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு  ரோகித் சர்மாதான் கேப்டனாக இருக்க வேண்டும்- ஜாகீர்கான்
x

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழி நடத்தும் பொறுப்பை ஒரு அனுபவமிக்கவரிடம் கொடுக்க வேண்டும்.

புதுடெல்லி,

இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் அணி விளையாடி வருகிறது.

முன்னதாக 2022 டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் டி20 அணியில் இடம்பெறவில்லை. அதனால் 2024-ல் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பையிலும் ரோகித் சர்மாதான் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஜாகீர்கான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "டி20 உலகக்கோப்பை வருவதற்கு குறைந்த காலங்கள் மட்டுமே இருக்கிறது. அதற்கு நீங்கள் சற்று அனுபவத்துடன் செல்ல வேண்டும். அத்தொடரில் இந்திய அணியை வழி நடத்தும் பொறுப்பை ஒரு அனுபவமிக்கவரிடம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் அவர்கள் ரோகித் சர்மாவை தேர்ந்தெடுத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். நீண்டகாலமாக விளையாடி வரும் அவருக்கு சூழ்நிலைகளை சமாளிப்பது, அழுத்தத்தை கையாள்வது போன்ற அம்சங்களில் அனுபவம் இருக்கிறது.

டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரும் நடைபெற உள்ளது. எனவே ஒன்று நீங்கள் ரோகித் சர்மாவுடன் செல்ல வேண்டும். அல்லது ஹர்திக் பாண்ட்யா காயத்திலிருந்து எந்தளவுக்கு குணமடைந்து வருகிறார் என்பதை பார்த்து முடிவெடுக்க வேண்டும். ஆனாலும் உலகக்கோப்பைக்கு முன்பாக பாண்ட்யா அதிகப்படியான போட்டிகளில் விளையாடியிருக்க மாட்டார். எனவே அந்த முடிவும் பின்னடைவாகவே இருக்கும்" என்று கூறினார்.


Next Story