ரோகித் அபார சதம்.... ஆப்கானிஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா..!


ரோகித் அபார சதம்.... ஆப்கானிஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா..!
x

image courtesy; twitter/@BCCI

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 3-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

பெங்களூரு,

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் பரீத் அகமது கடும் நெருக்கடி கொடுத்தார். அவரது பந்து வீச்சில் ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். மற்றொரு நம்பிக்கை நட்சத்திர வீரரான ஷிவம் துபே அஸ்மத்துல்லா பந்து வீச்சில் சிக்கினார்.

22 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறிய இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து காப்பாற்றினர். மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்ட இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். நேரம் செல்ல செல்ல அதிரடி காட்டிய ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ரிங்கு சிங் அரைசதம் அடித்தார்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 212 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக பரீத் அகமது 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 121 ரன்கள் குவித்தார்.


Next Story