உலகக் கோப்பை அணியை அறிவிக்க செப்டம்பர் 5 கடைசி நாள்: அஜித் அகர்கர்


உலகக் கோப்பை அணியை அறிவிக்க செப்டம்பர் 5 கடைசி நாள்: அஜித் அகர்கர்
x

image courtesy; ANI

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவிக்க செப்டம்பர் 5 கடைசி நாள் என இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.

புது டெல்லி,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது . கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

உலகக்கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் வரும் 30ம் தேதி ஆசிய கோப்பை தொடங்குகிறது. அதில் பங்குபெறும் இந்திய அணியை தேர்வு செய்ய அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு இன்று மதியம் 12 மணியளவில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அஜித் அகர்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஆசிய கோப்பைக்கான அணி அறிவிக்கபட்டது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் காயத்திலிருந்து மீண்டு வந்த கே.எல். ராகுல் , ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பும்ரா ஆகியோர் மீண்டும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். கடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா இந்த ஒருநாள் போட்டிகளில் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் ? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அகர்கர் கூறிய பதில் பின்வருமாறு;-

நாங்கள் காயத்திலிருந்து மீண்டு வந்த சில வீரர்களை அணியில் சேர்த்துள்ளோம். அவர்கள் மீண்டும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறோம். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகக்கோப்பைக்கான இந்திய அணியை அறிவிக்க கடைசி நாள் என கூறியுள்ளார்.


Next Story