தோனி கேப்டன்சியில் மீண்டும் விளையாடுவது குறித்து ஷர்துல் தாக்கூர் நெகிழ்ச்சி


தோனி கேப்டன்சியில் மீண்டும் விளையாடுவது குறித்து ஷர்துல் தாக்கூர் நெகிழ்ச்சி
x

image courtesy: AFP

இந்த ஆண்டு ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியில் ஷர்துல் தாக்கூர் விளையாட உள்ளார்.

சென்னை,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

இந்த நிலையில் சி.எஸ்.கே. அணியில் 2018 முதல் 2021-ம் ஆண்டு வரை விளையாடிய ஷர்துல் தாக்கூர், 2022-ம் ஆண்டு டெல்லி அணியிலும், 2023-ம் ஆண்டு கொல்கத்தா அணியிலும் விளையாடினார். இந்த நிலையில் தற்போது மூன்று ஆண்டுகள் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஷர்துல் தாக்கூர் திரும்புகிறார். அவரை கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் 4 கோடி ரூபாய் கொடுத்து சி.எஸ்.கே. எடுத்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷர்துல் தாக்கூர், 'உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஐ.பி.எல். தொடர் எனக்கு மோசமாக அமைந்தது. தற்போது எம்.எஸ். தோனிக்கு கீழ் மீண்டும் விளையாடுவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். அவருடன் விளையாடினால் நிறைய விஷயங்களை நம்மால் கற்றுக்கொள்ள முடியும். இல்லை நாம் செய்யும் தவறுகளை விட முடியும்.

அவர் ஸ்டெம்புக்கு பின் நின்று கொண்டு எங்களை வழிநடத்துவார். எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பார். நாங்கள் வளர அவரே வழி வகுத்துக்கொடுப்பார். சி.எஸ்.கே. அணியில் மீண்டும் இணைந்து இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏனென்றால் சி.எஸ்.கே. வெறும் அணி கிடையாது. அது ஒரு குடும்பம். குடும்ப கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் அணியாக சி.எஸ்.கே. இருக்கிறது' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


Next Story