அறுவை சிகிச்சை; முகமது ஷமி விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து


அறுவை சிகிச்சை; முகமது ஷமி விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
x

கோப்புப்படம்

கணுக்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமி விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக முகமது ஷமி இருந்தார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற உதவினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி இருந்தார் ஷமி. அதன்பின் இடது கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜனவரி கடைசி வாரத்தில் லண்டனில் சிகிச்சை எடுத்த ஷமிக்கு ஊசி ஒன்று செலுத்தப்பட்டதாகவும் அதன்பின் அவரால் சிறிது ஓட முடிந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அவரது காயம் கவலைக்குரிய வகையில் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அதிகாரி ஒருவர் சமீபத்தில் தகவல் தெரிவித்த நிலையில், ஷமிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

இதையடுத்து அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக முகமது ஷமி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதை எதிர்நோக்கியுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் கணுக்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமி விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துகிறேன் முகமது ஷமி. தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story