டெஸ்ட் போட்டி; 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இலங்கை


டெஸ்ட் போட்டி; 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இலங்கை
x

Image Courtesy: AFP

டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததை அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் தொடர் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது.

கொழும்பு,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி கடந்த 2ம் தேதி தொடங்கியது.

அதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் 91 ரன்கள் அடித்தார். இலங்கை அணியில் அதிகபட்சமாக விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 439 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 141 ரன்களும், சன்டிமால் 107 ரன்களும் அடித்து அசத்தினர். ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக நவீத் சத்ரன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 3-வது நாள் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 199 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கம் கண்டது. சிறப்பாக விளையாடி சதமடித்த இப்ராஹிம் சத்ரன் 101 ரன்களுடனும், ரஹ்மத் ஷா 46 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 4வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 112.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 56 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 7.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததை அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் தொடர் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது.


Next Story