இலங்கை அணி நிர்வாகம் உங்களைப்போல் புகார் செய்யவில்லை...மிக்கி ஆர்தர் கருத்திற்கு பதிலடி கொடுத்த ஆகாஷ் சோப்ரா..!!


இலங்கை அணி நிர்வாகம் உங்களைப்போல் புகார் செய்யவில்லை...மிக்கி ஆர்தர் கருத்திற்கு  பதிலடி கொடுத்த ஆகாஷ் சோப்ரா..!!
x

பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் கருத்திற்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டம் நடைபெற்ற அகமதாபாத் மைதானத்தில் இந்தியா அசத்திய தருணங்களில் உத்வேகத்தை கொடுக்கக் கூடிய "சக்தே இந்தியா" பாடல் ஒலிபரப்பப்பட்டதுபோல் பாகிஸ்தானின் "தில்தில் பாகிஸ்தான்" பாடல் ஒலிபரப்பப்படவில்லை என்று மிக்கி ஆர்தர் விமர்சித்தார். அத்துடன் பெரும்பாலும் இந்திய ரசிகர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டதாகவும் விமர்சித்த பாகிஸ்தான் அணியின் இயக்குனரான அவர் இது ஐசிசி நடத்தும் தொடரைபோல் அல்லாமல் பிசிசிஐ நடத்தும் தொடர்போல் இருப்பதாகவும் கடுமையாக சாடினார்.

இந்நிலையில் ஐதராபாத் மைதானத்தில் 'பாகிஸ்தான் ஜீதேகா' (பாகிஸ்தான் வெல்லும்) என்ற குரல் ரசிகர்களுக்கு மத்தியில் ஓங்கி ஒலித்து பாகிஸ்தான் அணிக்கு பெரிய ஆதரவு கிடைத்தபோது இலங்கை உங்களைப்போல் புகார் செய்யவில்லை என அவருக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு;-

"எங்களுடைய பாடலை போடுங்கள் என்று கேட்கிறீர்களா? . ஐதராபாத் ரசிகர் கூட்டத்தில் 'பாகிஸ்தான் ஜீதேகா' என்ற குரல் எழும்பிய போது இலங்கை நிர்வாகம் உங்களைப் போல் புகார் செய்யவில்லை. நரேந்திர மோடி மைதானத்தில் இன்று 'தில்தில் பாகிஸ்தான்' பாடல் ஒருமுறை ஒலிபரப்பப்பட்டிருந்தால் கூட நான் ஆச்சரியப்படுவேன்" என்று கூறியுள்ளார்.


Next Story