இந்த வருடம் தோனிக்கு இருக்கும் ஒரே பிரச்சினை இதுதான் - ராபின் உத்தப்பா கருத்து


இந்த வருடம் தோனிக்கு இருக்கும் ஒரே பிரச்சினை இதுதான் - ராபின் உத்தப்பா கருத்து
x

கோப்புப்படம்

தினத்தந்தி 15 March 2024 6:21 AM GMT (Updated: 15 March 2024 8:38 AM GMT)

இந்த தொடரின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐ.பி.எல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த தொடரின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்த சீசனானது 42 வயதான சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என்பதால் இந்த முறையும் கோப்பையை வென்று அவரை வழிஅனுப்ப சென்னை வீரர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு முட்டி வலியால் பாதிக்கப்பட்ட தோனி அறுவை சிகிச்சையை மேற்கொண்டு மீண்டும் தற்போது இந்த தொடரில் விளையாட இருக்கிறார். இந்நிலையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியதாவது,

தோனி நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் அவரை சி.எஸ்.கே அணி விளையாட அனுமதிக்கும். மேலும் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தோனியை விளையாட சொல்லி சி.எஸ்.கே அணி அழைக்கும். ஆனால் தோனிக்கு தற்போது இருக்கும் பிரச்சனை பேட்டிங் கிடையாது. என்றைக்குமே அவருக்கு பேட்டிங் ஒரு சிக்கலாக இருந்தது இல்லை.

தற்போது அவருடைய பிரச்சனையே விக்கெட் கீப்பிங் தான். ஏனெனில் அவருடைய முட்டி பகுதியில் தேய்மானம் ஏற்பட்டு இருக்கிறது. அதையும் மீறி அவர் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். ஒருவேளை தம்மால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது என்று அவர் நினைத்தால் நிச்சயம் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story