இந்த தொடரின் ஆரம்பத்தில் நாங்கள் சரியாக விளையாடவில்லை ஆனால் தற்போது... - டு பிளெஸ்சிஸ் பேட்டி


இந்த தொடரின் ஆரம்பத்தில் நாங்கள் சரியாக விளையாடவில்லை ஆனால் தற்போது... - டு பிளெஸ்சிஸ் பேட்டி
x

image courtesy: AFP

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.

தர்மசாலா,

ஐ.பி.எல் தொடரில் தரமசாலாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 92 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப் தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 181 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 60 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ரோசவ் 61 ரன்கள் எடுத்தார்.

பெங்களூரு தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் அபாரமாக பேட்டிங் ஆடிய விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த போட்டி மிகச் சிறப்பாக இருந்தது. கடைசி 5 - 6 ஆட்டங்களாக நாங்கள் 200 ரன்னுக்கு மேல் குவித்து வருகிறோம். இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் தொடர்ச்சியாக ஒரே தவறை செய்து வந்தோம். ஆனால் தற்போது பேட்டிங்கில் மிக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம்.

அதேபோன்று 6-7 வீரர்கள் பவுலிங் செய்வதால் பந்து வீச்சிலும் தற்போது அனைத்தும் கூடி வந்துள்ளது. இந்த தொடரின் ஆரம்பத்தில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. ஆனால் தற்போது தொடரின் முடிவில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ரன் குவிக்க ஆரம்பித்து விட்டார்கள். பந்துவீச்சாளர்கள் அனைவரும் விக்கெட்டுகளை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இது ஒரு நல்ல நிகழ்வு தான். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story