ஜடேஜாவுக்கு நிகரான ஸ்பின்னர் எங்களிடம் உள்ளார் - இங். முன்னாள் கேப்டன்


ஜடேஜாவுக்கு நிகரான ஸ்பின்னர் எங்களிடம் உள்ளார் - இங். முன்னாள் கேப்டன்
x

முதல் நாளிலேயே தாறுமாறாக சுழலக்கூடிய பிட்சுகளை வேண்டுமென்றே இந்தியா அமைத்தால் அதில் சிறப்பாக செயல்படுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

லண்டன்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி ஐதராபாத்தில் வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் முதல் நாளிலேயே தாறுமாறாக சுழலக்கூடிய பிட்சுகளை வேண்டுமென்றே இந்தியா அமைத்தால் அதில் சிறப்பாக செயல்படுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது ;- "ஒருவேளை இத்தொடரில் முதல் பந்தே சுழலும் அளவுக்கு பிட்ச் இருந்தால் அது மிகப்பெரிய தவறாக இருக்கும். ஏனெனில் ஜடேஜாவுக்கு நிகரான ஸ்பின்னர் எங்களிடம் உள்ளார். சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருந்தால் இங்கிலாந்து ஜேக் லீச்சை அணிக்குள் கொண்டு வரும். அவர் ரவீந்திர ஜடேஜாவை விட சிறந்த ஸ்பின்னரா? என்று கேட்டால் இல்லை. ஆனால் சுழலுக்கு சாதகமான மைதானங்களை நீங்கள் கொடுத்தால் அதில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தால் பின்னர் இலக்கை கட்டுப்படுத்துவதற்கு அவர் சரியான ஸ்பின்னர்.

அதேபோல பந்து ஆரம்பத்திலேயே அதிகமாக சுழன்றால் அதில் தடுமாறக்கூடிய இந்திய அணியை இங்கிலாந்து ஆல் அவுட் செய்து விடும். ஒருவேளை பிட்ச் பிளாட்டாக இருந்தால் இந்தியா ஆயிரக்கணக்கான ரன்கள் அடிக்கும். அங்கே இந்திய பவுலர்கள் பதிலுக்கு இங்கிலாந்தை ஆல் அவுட் செய்ய வேலை செய்ய வேண்டும். மேலும் இங்கிலாந்தின் அதிரடியான அணுகுமுறையில் அனைத்து எதிரணிகளும் அடி வாங்கியது என்பதை நினைத்து இந்தியா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களை பாருங்கள். அதனால் ஒருவேளை இங்கிலாந்து சாதாரணமாக விளையாடும் என்று எதிர்பார்த்து இத்தொடருக்கு இந்தியா வந்தால் அவர்களுக்கு ஆச்சரியம்தான் காத்திருக்கும். இங்கிலாந்துக்கு என்னுடைய ஆலோசனை என்னவெனில் இந்தியாவில் நீங்கள் ஒரே வழியில் விளையாடி வெல்ல முடியாது" இவ்வாறு அவர் பேசினார்.


Next Story