2வது ஒருநாள் போட்டி: ரோகித், கோலி ஆடாதது ஏன்..? - விளக்கம் அளித்த ஹர்த்திக் பாண்ட்யா


2வது ஒருநாள் போட்டி: ரோகித், கோலி ஆடாதது ஏன்..? - விளக்கம் அளித்த ஹர்த்திக் பாண்ட்யா
x

Image Courtesy: AFP

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி விளையாடவில்லை.

பார்படாஸ்,

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி பார்படாஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 40.5 ஓவர்களில் 181 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 182 ரன் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 36.4 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே 182 ரன் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற உள்ளது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் படேல் இடம் பெற்றனர். இந்நிலையில் அணியில் ரோகித், கோலி இடம் பெறாதது ஏன்? என பொறுப்பு கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது,

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடர்ச்சியாக பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு ஓய்வை வழங்கும் விதமாகவே இந்த போட்டியில் அவர்கள் இருவரும் விளையாட வில்லை.

மேலும் 3-வது ஒருநாள் போட்டியில் அவர்கள் இருவரும் புத்துணர்ச்சியோடு அணிக்கு திரும்புவதற்காகவே இந்த ஓய்வை அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story