இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் சிராஜ் ஏன் விளையாடவில்லை - பி.சி.சி.ஐ. விளக்கம்


இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் சிராஜ் ஏன் விளையாடவில்லை - பி.சி.சி.ஐ. விளக்கம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 2 Feb 2024 5:26 AM GMT (Updated: 2 Feb 2024 5:43 AM GMT)

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் ஆடவில்லை.

அவருக்கு பதிலாக, விளையாடும் அணியில் முகேஷ் குமார் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் சிராஜ் ஏன் விளையாடவில்லை என பி.சி.சி.ஐ. விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

முகமது சிராஜ் விசாகப்பட்டினத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தொடரின் காலம் மற்றும் சமீப காலங்களில் அவர் விளையாடிய கிரிக்கெட்டின் அளவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ராஜ்கோட்டில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அவர் தேர்வு செய்யப்படுவார். 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவேஷ் கான் மீண்டும் இணைந்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story