மகளிர் கிரிக்கெட்;வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி...!!


மகளிர் கிரிக்கெட்;வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி...!!
x

image courtesy;twitter/@BCCIWomen

தினத்தந்தி 16 July 2023 12:18 PM GMT (Updated: 17 July 2023 9:36 AM GMT)

வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளது.

டாக்கா,

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அங்கு 3போட்டிகள் கொண்ட டி20, மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை இந்திய பெண்கள் அணியினர் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினர்.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி தனது இன்னிஸ்சை தொடங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முர்ஷிதா கதூன் மற்றும் ஷர்மின் அக்தர் களமிறங்கினர். இருவரும் நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. ஷர்மின் அக்தர் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானார். முர்ஷிதா கதூன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தில் 15 ஓவர் முடிவிருந்த போது மழை குறுக்கிட்டது. மழை நீண்ட நேரம் பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.இதனால் போட்டி 44 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

மழை நின்றதும் தொடங்கிய ஆட்டத்தில் வங்கதேச அணி வீரர்கள் பர்கானா ஹக் 27 ரன்களும், நிகர் சுல்தானா 39 ரன்களும், ரித்து மோனி 8 ரன்களும், ரபேயா கான் 10 ரன்களும், நஹிடா அக்தர் 2 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இதன்மூலம், வங்காளதேச அணி 43 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அமன்ஜோத் கவுர் 4 விக்கெட்டுகள் விழ்த்தி அசத்தினார்.

பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.யாரும் எதிர்பாரத வகையில் இந்திய அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 5 ரன்களில் ஆட்டம் இழந்தார்.35.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் வங்கதேச மகளிர் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. வங்கதேச அணி தரப்பில் மருபா அக்தர் 4 விக்கெட்டுகள் விழ்த்தி அணி வெற்றி பெற உதவினார். அவரே ஆட்டநாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி வரும் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.


Next Story