மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; ஷோபி டெவைன் சதம்...இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நியூசிலாந்து


மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; ஷோபி டெவைன் சதம்...இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நியூசிலாந்து
x

Image Courtesy: @ICC

நியூசிலாந்து தரப்பில் அபாரமாக ஆடிய ஷோபி டெவைன் 100 ரன்கள் அடித்தார்.

ஹாமில்டன்,

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களின் முடிவில் 2-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து 46.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 194 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் எமி ஜோன்ஸ் 50 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் ஜெஸ் கெர், ஹன்னா ரோவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 195 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 39 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அபாரமாக ஆடிய ஷோபி டெவைன் 100 ரன்கள் அடித்தார். இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றாலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.



Next Story