உலகக்கோப்பை கிரிக்கெட்: இன்று மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு..!


உலகக்கோப்பை கிரிக்கெட்: இன்று மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு..!
x

சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுவதையொட்டி மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் சென்னையில் நடைபெறும் 2-வது ஆட்டம் இதுவாகும்.

போக்குவரத்து நெரிசல் இருக்க கூடும் என்பதால், ரசிகர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு செய்வது குறித்து, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி, கிரிக்கெட் போட்டியை பார்த்து விட்டு, வீடுகளுக்கு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக, இரவு 12.00 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நீல வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமானம் நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை வரை ரெயில் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில், டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து பரங்கிமலை ரெயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டினை காண்பித்து மெட்ரோ ரெயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம். இச்சலுகை மைதானத்திலிருந்து வீடு திரும்பும் போது மட்டுமே பொருந்தும், மைதானத்திற்கு செல்லும் போது பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story