உலகக்கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் அஷ்வின் இடம் பெறுவாரா..? - பந்துவீச்சு பயிற்சியாளர் பேட்டி


உலகக்கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் அஷ்வின் இடம் பெறுவாரா..? - பந்துவீச்சு பயிற்சியாளர் பேட்டி
x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் புனேவில் மோத உள்ளன.

புனே,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை புனேவில் சந்திக்க உள்ளது.

இந்திய அணி இதுவரை 3 லீக் ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாளை நடைபெறும் வங்காளதேசத்துக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஷ்வின் இடம் பெறுவாரா என்ற கேள்விக்கு இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அஷ்வின் போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர் இருந்தும் அவருக்கு உங்களால் வாய்ப்பு கொடுக்க முடியாதது மிகவும் கடினமான முடிவாகும். இருப்பினும் அணியின் நலனுக்காக இது போன்ற கடினமான முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

அத்துடன் இந்த முடிவுகள் அனைத்தும் வீரர்களிடம் பேசப்பட்ட பின்பே எடுக்கப்படுகிறது. குறிப்பாக மைதானத்திற்கு தகுந்த அணியை நாங்கள் தேர்வு செய்கிறோம். எனவே அணி நலனை விரும்பும் அஷ்வின் போன்றவர் இதற்காக எப்போதும் கவலைப்பட்டதாக நான் பார்த்ததில்லை.

மேலும் அவரைப் போன்றவர் எங்களுடைய அணியில் இருப்பது நிறைய உதவியாக இருக்கிறது. அதே போல ஷமியை தேர்வு செய்யாததும் உண்மையாகவே கடினமான முடிவாகும். ஆனால் மைதானத்திற்கு எம்மாதிரியான அணி தேவை என்பதைப் பொறுத்தே நாங்கள் தேர்வு செய்கிறோம்.

இதற்காக அவரிடம் நாங்கள் தெளிவாக பேசியுள்ளோம். குறிப்பாக அவர் புதிய பந்திலும், டெத் ஓவர்களிலும் எங்களுக்கு சிறப்பாக செயல்படக் கூடியவர். ஆனால் களத்தில் 11 பேரை மட்டுமே நீங்கள் விளையாட வைக்க முடியும் என்பதால் இது போன்ற சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. மேலும் இந்தியா தங்களுடைய வெற்றி அணியை மாற்றாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story