உலகக்கோப்பை; அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட ஆர்வமாக உள்ளேன் - நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா


உலகக்கோப்பை; அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட ஆர்வமாக உள்ளேன் - நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 13 Nov 2023 1:44 AM GMT (Updated: 13 Nov 2023 1:55 AM GMT)

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

மும்பை,

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மும்பையிலும், தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் கொல்கத்தாவிலும் மோத உள்ளன. இந்நிலையில் அரையிறுதியில் இந்தியாவுடனான மோதல் குறித்து நியூசிலாந்து இளம்வீரர் ரச்சின் ரவீந்திரா கூறியதாவது,

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட ஆர்வமாக உள்ளேன். மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஆஸ்திரேலியாவை மெல்போர்னிலும், இங்கிலாந்தை லார்ட்சிலும் தோற்கடிப்பது கடினம். இதேபோல் இந்தியாவை மும்பை வான்கடேயில் தோற்கடிப்பதும் கடினம்தான். அவர்களுக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இருக்கும். எங்களுக்கும் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த முறை இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு செல்வோம். சிறு வயதில் இருந்தே இதேபோன்று பெரிய நாக்-அவுட் போட்டியில் விளையாட வேண்டும் என்று கனவு காண்பேன். தற்போது அது நிகழ்ந்துள்ளது. அதுவும் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதால் கூடுதல் உற்சாகமாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story