உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி: அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறிய நியூசிலாந்து அணி


உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி: அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறிய  நியூசிலாந்து அணி
x

image courtesy; twitter/@NZ_Football

இன்று நடைபெற்ற சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டி 0-0 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது.

டூனெடின்,

பெண்களுக்கான 9-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும். லீக் சுற்றுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

11-வது நாளான இன்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் 'ஏ'பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து- சுவிட்சர்லாந்து அணிகள் தங்களது கடைசி லீக் போட்டியில் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழ்நிலையில் நியூசிலாந்து அணி விளையாடியது. ஆனால் அந்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இரு அணிகளும் எவ்வளவு முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதன் மூலம் சுவிட்சர்லாந்து அணி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. நியூசிலாந்து அணி வெளியேறியது.

சுவிட்சர்லாந்து தனது லீக் போட்டிகளில் நார்வே மற்றும் நியூசிலாந்திற்கு எதிராக சமனும், பிலிப்பைன்சுக்கு எதிராக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அதே வேளையில் நியூசிலாந்து நார்வேக்கு எதிராக வெற்றியும்,பிலிப்பைன்சுக்கு எதிராக தோல்வியும்,சுவிட்சர்லாந்துக்கு எதிராக சமனும் பெற்று வெளியேறியது. குரூப் 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து மற்றும் 2-வது இடம் பிடித்த நார்வே அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியெறி உள்ளன.

உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி 2023-ல் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய முதல் 2 அணிகள் நார்வே மற்றும் நியூசிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story