இந்திய சப்-ஜூனியர் ஆக்கி: பயிற்சியாளர்களாக சர்தார் சிங், ராணி ராம்பால் நியமனம்


இந்திய சப்-ஜூனியர் ஆக்கி: பயிற்சியாளர்களாக சர்தார் சிங், ராணி ராம்பால் நியமனம்
x

Image Courtesy : ANI

தினத்தந்தி 10 Aug 2023 8:25 PM GMT (Updated: 10 Aug 2023 9:04 PM GMT)

17 வயதுக்கு உட்பட்ட இந்திய ஆண்கள் அணிக்கு முன்னாள் கேப்டன் சர்தார் சிங் பயிற்சியாலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியின் ஓய்வு நாளான நேற்று ஆக்கி இந்தியா அமைப்பின் 100-வது செயற்குழு கூட்டம் அதன் தலைவர் திலிப் திர்கே தலைமையில் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு திலிப் திர்கே நிருபர்களிடம் கூறுகையில், 'பயிற்சி கட்டமைப்பில் குறிப்பாக இளையோருக்கான அடிமட்ட அளவில் சில மாற்றங்களை கொண்டு வர ஆக்கி இந்தியா முடிவு செய்துள்ளது. கீழ்மட்ட அளவிலான ஆக்கியை வலிமைமிக்கதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் 21 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், சப்-ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோருக்கு) பிரிவினருக்கும் முக்கியத்துவம் அளிக்க உள்ளோம். இதன் ஒரு பகுதியாக தேசிய சப்-ஜூனியர் ஆக்கி அணிகளை முதல்முறையாக ஆக்கி இந்தியா உருவாக்குகிறது. இளைஞர்கள், சர்வதேச அளவிலான போட்டிகளில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

17 வயதுக்கு உட்பட்ட இந்திய ஆண்கள் அணிக்கு முன்னாள் கேப்டன் சர்தார் சிங்கும், பெண்கள் அணிக்கு முன்னாள் கேப்டன் ராணி ராம்பாலும் பயிற்சியாளராக இருப்பார்கள். தேசிய சப்-ஜூனியர் அணிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுவதுடன், அவர்களுக்கு சர்வதேச தொடர்களில் கலந்து கொண்டு விளையாட ஏற்பாடு செய்யப்படும். தேசிய சப்-ஜூனியர் அணிகளுக்கான பயிற்சி முகாம் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது' என்றார்.


Next Story