உலக மகளிர் குத்து சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிய 4 வீராங்கனைகள்


உலக மகளிர் குத்து சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிய 4 வீராங்கனைகள்
x

உலக மகளிர் குத்து சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு 4 இந்திய வீராங்கனைகள் முன்னேறி 4 பதக்கங்களை உறுதி செய்து உள்ளனர்.



புதுடெல்லி,


டெல்லியில் உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 48 கிலோ எடை பிரிவில் இன்று நடந்த அரையிறுதி போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை நீத்து காங்காஸ் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை ஆலுவா பால்கிபெகோவா விளையாடினர்.

இந்த போட்டியில், முதல் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய கஜகஸ்தான் வீராங்கனை 2-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றார். எனினும், 2-வது சுற்றில் வலிமையுடன் மீண்டு வந்து, நீத்து அதிரடியாக தாக்குதல் முறையை கையாண்டார்.

கடைசி 3 நிமிடங்களில் நீத்து தொடர்ந்து அதிரடியாக செயல்பட்டார். இதனால் இருவருக்கும் இடையே ஒரு பதற்றம் காணப்பட்டது. இதனை தொடர்ந்து, போட்டியில் மறு ஆய்வு செய்யப்பட்டது.

போட்டி முடிவில் நீத்து 5-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். இதனை அடுத்து இந்திய வீராங்கனை நீத்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதனால், பதக்கம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதேபோன்று, 50 கிலோ எடை பிரிவில் இன்று நடந்த மற்றொரு அரையிறுதி போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை நிக்கத் ஜரீன் மற்றும் கொலம்பியா வீராங்கனை இங்கிரித் வேலன்சியா விளையாடினர்.

இந்த போட்டியில், அதிரடியாக விளையாடிய 26 வயதுடைய நிக்கத் 5-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ) மற்றும் சவீட்டி பூரா (81 கிலோ) ஆகியோர் முறையே தத்தமது போட்டிகளில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இதனால், இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.


Next Story