ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் 4 தங்கப்பதக்கம் வென்றனர்


ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் 4 தங்கப்பதக்கம் வென்றனர்
x

ஒரேநாளில் இந்தியா 4 தங்கம், ஒரு வெள்ளி என 5 பதக்கங்களை அள்ளியது.

அம்மான்,

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ருஸ்மிடோவா சோக்ஹிபாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

அசாமை சேர்ந்த லல்வினா 69 கிலோ பிரிவில் இருந்து 75 கிலோவுக்கு மாறிய பிறகு களம் கண்ட முதல் போட்டியிலேயே அசத்தி இருக்கிறார்.

63 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பர்வீன் 5-0 என்ற கணக்கில் ஜப்பானின் கிடோ மாய்யை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

52 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மினாக்‌ஷி 1-4 என்ற கணக்கில் ஜப்பானின் கினோஷிதா ரின்காவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். கடைசி நேரத்தில் அபாரமான குத்துக்களை விட்ட மினாக்‌ஷி முதலில் சிறப்பாக செயல்படாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

81 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை சவீட்டி 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் குல்சயா யெர்ஹானை சாய்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 81 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை அலிபியா கான் ஜோர்டானின் இஸ்லாம் ஹூசைலியை சந்தித்தார். இதில் முதல் ரவுண்டில் இஸ்லாம் ஹூசைலி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அலிபியா தங்கப்பதக்கத்தை பெற்றார். நேற்று இந்தியா ஒரேநாளில் 4 தங்கம், ஒரு வெள்ளி என 5 பதக்கங்களை அள்ளியது.


Next Story