ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியா காலிறுதிக்கு தகுதி


ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியா காலிறுதிக்கு தகுதி
x

image courtesy; PTI

இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

சிலாங்கூர்,

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதின.

இதில் முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கை சேர்ந்த யங் கா லாங் அங்குஸ் உடன் மோதினார். இதில் பிரனாய் 18-21 மற்றும் 14-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதன் மூலம் ஹாங்காங் முதலில் 1-0 என முன்னிலை பெற்றது.

இதன் பின் நடைபெற்ற இரட்டையர் பிரிவில் இந்திய நட்சத்திர ஜோடியான சாத்விக் சாய்ராஜ் - சிராங் செட்டி இணை தங்களது போட்டியில் வெற்றி பெற்றனர். அதன் பின் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்தியா முன்னிலை பெற உதவினர்.

முடிவில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா காலிறுதியில் சீனாவுடன் மோத உள்ளது.


Next Story