செஸ் ஒலிம்பியாட்- இரண்டு வெண்கலம் வென்று இந்திய அணிகள் அசத்தல்


செஸ் ஒலிம்பியாட்- இரண்டு வெண்கலம் வென்று இந்திய அணிகள் அசத்தல்
x
தினத்தந்தி 9 Aug 2022 10:49 AM GMT (Updated: 9 Aug 2022 11:47 AM GMT)

செஸ் ஒலிம்பியாடில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.

சென்னை,

186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது. இறுதி நாளான இன்று இந்திய அணி 2 வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது. செஸ் ஒலிம்பியாடில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.

ஆடவர் இந்தியா பி அணியில் இடம்பெற்றுள்ள ப்ரக்ஞானந்தா, குகேஷ், ரௌனக், அதிபன் மற்றும் நிஹல் ஆகியோர் விளையாடினர். 8 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்ற குகேஷ், நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தார். இதனையடுத்து 9/11 என்ற கணக்கில் அவர் இந்திய அணிக்கு பதக்கத்தை உறுதி செய்தார்.

11 போட்டிகளில் விளையாடிய இந்தியா பி அணி 8 வெற்றி, 1 தோல்வி மற்றும் 2 ட்ரா என்ற கணக்கில் 18 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில் நேற்று மற்றும் இன்றைய தோல்வி காரணமாக இந்திய அணி தங்கப்பதக்க வாய்ப்பை தவறவிட்டது. இதனை அடுத்து மகளிர் பிரிவில் தானியா சச்தேவ், ஹரிகா அடங்கிய இந்தியா ஏ அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

ஆடவர் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றுள்ளது. அர்மீனியா அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது.


Next Story