செஸ் ஒலிம்பியாட் தொடரில் இருந்து சீனா விலகல்..!!


செஸ் ஒலிம்பியாட் தொடரில் இருந்து சீனா விலகல்..!!
x

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரில் இருந்து விலகுவதாக சீனா அறிவித்துள்ளது.

சென்னை,

வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை 44-வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடக்கிறது. 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன.

இதில் 189 அணிகள் பொது பிரிவு போட்டிகளிலும், 154 அணிகள் பெண்கள் பிரிவிலும் விளையாடுகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் உலகம் முழுவதிலும் இருந்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து 20 வீரர்கள் இதில் பங்கு பெறுகின்றனர்.

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்படும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி செஸ் ஒலிம்பியாட்டின் முதல் ஜோதி ஓட்டம் டெல்லியில் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இந்திராகாந்தி மைதானத்தில் இந்த ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம், 40 நாட்கள் இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் வலம் வருகிறது. ஜூலை 27-ந் தேதி ஒலிம்பியாட் ஜோதி, மாமல்லபுரத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்பதாக பதிவு செய்திருந்தநிலையில் திடீரென விலகுவதாக சீனா அறிவித்துள்ளது. பலம் வாய்ந்த ரஷியா அணிக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது சீனாவும் விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மாட்ரிட்டில் நடைபெறும் போட்டியில் விளையாடி வரும், உலக அளவில் இரண்டாம்நிலை வீரரும், சீனாவின் முன்னணி வீரரான டிங் லிரன், ஒலிம்பியாட் போட்டியில் தானும் அணியும் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story