நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் எப்போது? - தாயார் பதில்


நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் எப்போது? - தாயார் பதில்
x

ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வரும் 25 வயதான நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் எப்போது என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

பானிபட்,

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 9 நாட்கள் நடந்தது. இதில் 195 நாடுகளைச் சேர்ந்த 2,100 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடைசி நாளான நேற்று முன்தினம் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை தட்டி தூக்கினார்.

நீரஜ் சோப்ராவின் சொந்த ஊரான அரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள கந்த்ரா கிராமத்தில் நள்ளிரவிலும் அவரது வெற்றியை அந்த பகுதி மக்களும், உறவினர்களும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். 'நீரஜ் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றது நம் நாட்டுக்கு பெருமையான தருணம். அவர் தாயகம் திரும்பியதும் இந்த வெற்றியை கொண்டாடுவோம்' என்று அவரது தந்தை சதீஷ்குமார் தெரிவித்தார்.

ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வரும் 25 வயதான நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் எப்போது என்ற பேச்சும் கிளம்பியுள்ளது. 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது அவரது குடும்பத்தினரின் திட்டம். ஆனால் அதற்கு இன்னும் சோப்ரா சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.

அவரது தாயார் சரோஜ் தேவி கூறுகையில், 'தற்போது நீரஜ் சோப்ரா விளையாட்டில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். எப்போது அவர் திருமணம் செய்ய விரும்புகிறாரோ அப்போது அது நடக்கும். நாங்கள் கட்டாயப்படுத்தமாட்டோம். அவரது ஆசைப்படியே எல்லாம் நடைபெறும்' என்றார்.


Next Story