பயிற்சியின் போது காயம்: ஒலிம்பிக் போட்டியில் இருந்து நீளம் தாண்டுதல் வீரர் ஸ்ரீசங்கர் விலகல்


பயிற்சியின் போது காயம்: ஒலிம்பிக் போட்டியில் இருந்து நீளம் தாண்டுதல் வீரர் ஸ்ரீசங்கர் விலகல்
x

image courtesy: SAI twitter via ANI

ஒலிம்பிக்குக்கு தயாராகி வந்த ஸ்ரீசங்கருக்கு சில தினங்களுக்கு முன்பு பயிற்சியின் போது கால்முட்டியில் காயம் ஏற்பட்டது.

புதுடெல்லி,

இந்திய முன்னணி நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர், கடந்த ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 8.37 மீட்டர் தூரம் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றதுடன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

இந்த நிலையில் ஒலிம்பிக்குக்கு தீவிரமாக தயாராகி வந்த அவருக்கு சில தினங்களுக்கு முன்பு பயிற்சியின் போது கால்முட்டியில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பலக்கட்ட பரிசோதனை மற்றும் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசித்த போது காயத்துக்கு ஆபரேஷன் செய்வதே சிறந்ததாக இருக்கும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். விரைவில் அவருக்கு ஆபரேஷன் நடக்க உள்ளது. இதனால் அவரது பாரீஸ் ஒலிம்பிக் கனவு தகர்ந்தது.

ஒலிம்பிக் மட்டுமின்றி இந்த ஆண்டு முழுவதும் தன்னால் விளையாட முடியாது என்று ஸ்ரீசங்கர் சமூக வலைதளத்தில் கூறியுள்ளார். 'வாழ்க்கையில் சில நேரம் இது போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கத் தான் செய்யும். அதை ஏற்றுக்கொண்டு அதில் இருந்து தைரியமாக மீண்டு வர வேண்டும். அதைத் தான் நான் செய்யப்போகிறேன். இந்த நேரத்தில் உங்களது அன்பும், பிரார்த்தனையும் எனக்கு தேவைப்படுகிறது' என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

கேரளாவைச் சேர்ந்த 25 வயதான ஸ்ரீசங்கர் ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் ஆவார்.


Next Story