சர்வதேச பெண்கள் செஸ் போட்டி: தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனைகள் வெற்றி


சர்வதேச பெண்கள் செஸ் போட்டி: தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனைகள் வெற்றி
x

கோப்புப்படம் 

சர்வதேச பெண்கள் கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.

சென்னை,

வேலம்மாள் கல்வி நிறுவனம் ஆதரவுடன் சர்வதேச பெண்கள் கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.மாலா போட்டியை தொடங்கி வைத்தார். முதல் சர்வதேச மாஸ்டர் மானுவேல் ஆரோன், 'பிடே' முன்னாள் துணைத்தலைவர் டி.வி.சுந்தர், தமிழ்நாடு செஸ் சங்க தலைவர் எம். மாணிக்கம், செயலாளர் ஸ்டீபன் பாலசாமி உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். 12 வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி 11 சுற்றுகள் கொண்டதாகும்.

இதில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை வெல்புலா சரயு 37-வது காய்நகர்த்தலில் சக நாட்டு வீராங்கனை மவுனிகா அக்ஷயாவை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மகாலட்சுமி, சக நாட்டு வீராங்கனை ரிந்தியாவை வீழ்த்தினார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி சிட்லாங்கே, மங்கோலியாவின் உர்ட்சாய்க் ஊரின்டுயாவை சாய்த்தார். இந்திய வீராங்கனைகள் மேரி ஆன் கோம்ஸ், மோனிஷா ஆகியோரும் தங்கள் ஆட்டங்களில் வெற்றி கண்டனர். இன்று 2-வது, 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெறுகிறது.


Next Story