உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது
x

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றுள்ளது.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது

புதுடெல்லி,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இளவேனில் வளறிவான், ரமிதா, ஸ்ரேயா அக்ராவால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி முதலாவது தகுதி சுற்றில் 944.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. 2-வது தகுதி சுற்றில் டென்மார்க்கை விட சற்று பின்தங்கியது.

இதைத் தொடர்ந்து இறுதிசுற்றுக்கு முன்னேறிய இந்தியா தங்கப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் டென்மார்க்கை எதிர்கொண்டது. இதில் இலக்கை நோக்கி துல்லியமாக சுட்ட இளவேனில், ரமிதா, ஸ்ரேயா ஆகியோர் கொண்ட இந்திய குழுவினர் 17-5 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியினரை சாய்த்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர். முன்னாள் 'நம்பர் ஒன்' வீராங்கனையான இளவேனில் கடலூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கான ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் ருத்ராங்க்‌ஷ் பட்டீல், பார்த் மஹிஜா, தனுஷ் ஸ்ரீகாந்த் ஆகியோர் அடங்கிய இந்தியா அணியினர் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் 10-16 என்ற புள்ளி கணக்கில் குரோஷியாவிடம் தோல்வியை தழுவினர்.

பதக்கப்பட்டியலில் தென்கொரியா 3 தங்கம், ஒரு வெள்ளி என்று 4 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது. இந்தியா ஒரே தங்கப்பதக்கத்துடன் 5-வது இடத்தில் உள்ளது.


Next Story