பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் - பிரதமர் மோடி கவலை

பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் காந்தி எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் என பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-17 11:24 GMT

ரபேல் விவகாரத்தில் காவலாளிதான் திருடன் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். எனவே, அவருக்கு பதிலடியாக, ‘நானும் காவலாளிதான்’ என்ற பிரசாரத்தை நடத்துமாறு பா.ஜனதாவினருக்கு மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி, அவர் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பா.ஜனதா தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் தங்கள் பெயருக்கு முன்னால் ‘சவுகிதார்’ என்று சேர்த்துக் கொண்டுள்ளனர். 

இந்நிலையில் பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் காந்தி எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் என பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

மராட்டியத்தில் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தரம்தாழ்ந்து பேசுகிறார்கள். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் இந்த சமுதாயத்தில் உள்ள எல்லா மோடிகளும் திருடர்கள் என்று சொல்கிறார்கள்.  என்னை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரே இனத்தையே களங்கப்படுத்துகிறார்கள். அவர்களது பேச்சு எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. 

இனியும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவன். அதனால் வாரிசுதாரர்கள் என்னை பார்த்து கேலி செய்கிறார்கள். நான் காவலாளி என்றால் திருடன் என்கிறார்கள். உண்மையில் இந்த நாட்டை திருட நினைப்பவர்களுக்கு நான் காவலாளிதான். இதனால் அவர்களது கோ‌ஷம் என்னையும் தாண்டி என் சமுதாயத்தின் மீதும் பாய்ந்துள்ளது என்று கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்