பி.பி.ஓ. தொழிலை ஊக்கப்படுத்த நடவடிக்கை - டுவிட்டரில் பிரதமர் மோடி தகவல்

பி.பி.ஓ. தொழிலை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் மோடி டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-24 02:52 GMT
புதுடெல்லி, 

ஐ.டி. என்று அழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பி.பி.ஓ. தொழில் பிரபலமாகி வருகிறது. இதற்கான பல முக்கிய சீர்திருத்தங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் அறிவித்தது.

இந்த நிலையில் ஓ.எஸ்.பி. என்னும் பிற சேவைகள் வழங்குனர்களுக்கான வழிகாட்டுதல்களை தாராளமயமாக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் பி.பி.ஓ.களுக்கான வலுவான உலகளாவிய இடமாக இந்தியா நிலை நிறுத்தப்படும். உள்நாடு மற்றும் சர்வதேச ஓ.எஸ்.பி.களுக்கு இடையிலான வேறுபாடு நீக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பி.பி.ஓ. தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையில், 2020 நவம்பரில் தாராளமயமாக்கப்பட்ட ஓ.எஸ்.பி. வழிகாட்டுதல்கள் மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இது வர்த்தகம் மற்றும் ஒழுங்குமுறை தெளிவை மேலும் எளிதாக்குகிறது. இது இணக்கச்சுமையை குறைக்கும். நமது தொழில்நுட்பத்துறைக்கு உதவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனால் பொதுவான தொலைதொடர்வு வளங்களை கொண்டுள்ள பி.பி.ஓ. மையம், இப்போது இந்தியா உள்பட உலகளவில் அமைந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடியும். வழிகாட்டுதல்களை தளர்த்துவதால், பி.பி.ஓ. நிறுவனங்களின் செலவுகளும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்