தடுப்பூசி போடாத ஊழியர்கள் பணிக்கு வரக்கூடாது: டெல்லி அரசு
கொரோனா தடுப்பூசிகூட போடாத டெல்லி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வருகிற 16-ந் தேதி முதல் அவர்களது அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று டெல்லி அரசு தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.
டெல்லி அரசு தலைமைச் செயலாளரும், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய நிர்வாகக் குழு தலைவருமான விஜய் தேவ் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஒரு ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகூட போடாத டெல்லி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வருகிற 16-ந் தேதி முதல் அவர்களது அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள். முன்களப் பணியாளர்களுக்கும் இது பொருந்தும். அவர்கள் அனைவரும், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை விடுப்பில் இருப்பதாக கருதப்படுவார்கள்.
டெல்லியில் பணிபுரியும் தமது ஊழியர்களுக்கும் இது போன்ற கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.