வீட்டின் கதவு தலையில் மோதியதில் 2 மாத குழந்தை பரிதாப சாவு

வீட்டின் கதவு தலையில் மோதியதில் 2 மாத குழந்தை பரிதாப உயிரிழந்தது.

Update: 2023-08-17 20:15 GMT

திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன். இவரது மனைவி ஆயிஷா சித்திகா. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஆயிஷா சித்திகாவிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கயான் பிலாந்து என்ற பெயரிடப்பட்ட அந்த குழந்தை உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6-ந் தேதி உறவினர் வீட்டு திருமணத்திற்கு சிராஜுதீன் குடும்பத்துடன் செல்ல, வீட்டின் கதவை சாத்தியதாக தெரிகிறது. அப்போது காற்றின் காரணமாக கயான் பிலாந்து தலையில் கதவு மோதியது. இதனை ஆயிஷா சித்திகாவிற்கு கவனிக்கவில்லை என்று தெரிகிறது.அவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் அங்கு குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. மேலும் குழந்தையின் தலையில் வீங்கியிருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் டாக்டரிடம் காண்பித்தபோது, அவர் குழந்தையின் தலையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த குழந்தை சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காண்பித்தனர். இதையடுத்து டாக்டர்கள், குழந்தைக்கு சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பினர்.இந்த நிலையில் குழந்தை மீண்டும் அழத்தொடங்கியதை தொடர்ந்து, அந்த தனியார் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு 10-ந் தேதி குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்